”முன்னர் ஆட்சி புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன.எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின.எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை செவிமடுத்தன.பேச்சு,கருத்து சுதந்திரம் கொடுத்தன.சிறப்புரிமைகளை அங்கீகரித்தன.ஆனால் தற்போதைய அநுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கியாளுகைகளையும் முன்னெடுத்து தமது இயலாமைகளையும் ஆட்சியின் அவலட்சணத்தையும் மூடி மறைக்க முற்படுகின்றது”
கே.பாலா
கட்சிக்குள் பிளவுகள்,உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பின்னடைவு, மக்கள் ஆதரவில் வீழ்ச்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமை,எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள், மீண்டெழும் ராஜபக்ஸக்கள்,ஊடகங்களின் கடும் விமர்சனம்.வரவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல் என பலமுனை பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும்,நெருக்கடிகளிலும் சிக்கித்தவிக்கும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி அரசு இவற்றை எதிர்கொண்டு சமாளிக்க தற்போது ”சர்வாதிகாரம்” என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.
மாற்றம்,மக்களாட்சி,ஜனநாயகம்,இன,மத,நல்லிணக்கம்,சுதந்திரம் என்ற கோஷங்களோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சிபீடம் ஏறியவர்கள் ,சில மாதங்களுக்குள்ளேயே ஆட்டம் காணத் தொடங்கியதனால் நிறைவேற்றதிகாரம்,சர்வாதிகாரம், இன,மத நல்லிணக்க விரோதம் என்ற ஜனநாயக ஆட்சிக்கு முரணான திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னைய அரசுகளும் இந்த வழியில் பயணித்தாலும் கூட நாட்டின் உயர்பீடமான பாராளுமன்றத்தில் சர்வாதிகாரத்தை பயன்படுத்த வில்லை.ஆனால் மாற்றம் என வந்தவர்கள் அதிலும் மாற்றம் செய்து நாட்டின் உயர்பீடமான பாராளுமன்றத்திலும் சர்வாதிகாரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
முன்னர் ஆட்சி புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன. எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின.எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை செவிமடுத்தன.பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் கொடுத்தன.சிறப்புரிமைகளை அங்கீகரித்தன.ஆனால் தற்போதைய அநுரகுமார அரசு பாராளுமன்றத்தில் கூட எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடாவடித்தனங்களையும் அடக்கியாளுகைகளையும் முன்னெடுத்து தமது இயலாமைகளையும் ஆட்சியின் அவலட்சணத்தையும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் கோமாளித்தனங்களையும் மூடி மறைக்க முற்படுகின்றது.
அதிலும் நாட்டின் பிரதமராக ஆசைப்பட்டு கட்சிக்குள்ளேயே காய்களை நகர்த்தி தற்போதைய பிரதமருக்கு குடைச்சல் கொடுத்து வரும் சபை முதல்வராக உள்ள அமைச்சர் பிமல் ரத்னாயக்க சபை சம்பிரதாயங்களையும் நிலையியல் கட்டளைகளையும் எதிர்கட்சிகளுக்குள்ள சிறப்புரிமைகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்காது மிகவும் மோசமான முறையில் தான்தோன்றித்தனமாகவும் சர்வாதிகாரத்தனமாகவும் நடந்து கொள்வது இலங்கை பாராளுமன்றத்தில் முன்னெப்போதும் சபை முதல்வர்கள் நடந்து கொள்ளாத தலைக்கன நடத்தைகளாகவே உள்ளன.ஒரு தெரு சண்டியர் போலவே அவரின் நடவடிக்கைகள் சபையில் காணப்படுகின்றன.
தாம் எதிர்க்கட்சியில் இருந்த போது எதிர்க்கட்சிகளின் உரிமை என அரசுடன் வாதாடிய,போராடிய விடயங்களில் இவர்கள் இப்போது முன்னைய அரசுகளை விடவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தனமாக பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளத் தலைப்பட்டுள்ளனர்.இதன் முதல் வெளிப்பாடாக பாராளுமன்றக் குழுக்களுக்கு தலைவர்களை தெரிவு செய்யும் விடயத்தில் முதலில் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்களின் வேடம் கலைந்தது. தாம் எதிர்க்கட்சியில் இருந்தபோது எந்த எந்த பாராளுமன்றகுழுக்களின் தலைவர் பதவிகள் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமென போராடிப் பெற்றார்களோ தாம் ஆட்சியாளர்களான பின்னர் அந்த பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகள் கோரிய போதும் அதனை அவர்களுக்கு வழங்க மறுத்து தாமே வைத்துக் கொண்டனர்.
அது மட்டுமன்றி பாராளுமன்றத்தில் அரசை கடுமையாக விமர்சிக்கும்,குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும், பதிலளிக்க முடியாத கேள்விகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இலக்கு வைக்கப்பட்டு பழிவாங்கப்படத் தொடங்கியுள்ளனர். இவ்வாறானவர்களில் அரசினால் குறிப்பாக சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்கவால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முதல் பலிக்கடாவாக்கப்பட்டவர் சுயேட்சைக்குழு 17 இன் யாழ் மாவட்ட எம்.பி.யான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்.சபையில் அதிக இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் சர்ச்சை பேச்சுக்களை பேசுவதாகவும் குற்றம்சாட்டி அவரின் சபை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டு அக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து 4 வாரங்களுக்கு அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைகள்,வெளிவிடும் கருத்துக்களை நேரடி ஒளிபரப்பு செய்ய விசேட குழுவின் பரிந்துரையில் தடை விதிக்கப்பட்டது.இவ்வாறான ஒரு தடை பாராளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை. அது மட்டுமன்றி சபையில் அடிக்கடி எழுந்து கேள்வி எழுப்பிய குற்றச்சாட்டில் அர்ச்சுனா இராமன்தான் எம்.பி சபையிலிருந்தும் ஒருதடவை வெளியேற்றப்பட்டார்.
எதிர்க்கட்சிகளின் சிறப்புரிமைகளைக் வழங்க மறுத்தும் சபாநாயகரைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தன் கண் அசைவு, கையசைவுகளுக்கு செயற்பட வைப்பதுடன் சபா பீடத்திற்கு தலைமைதாங்கும் உறுப்பினர்களைக்கூட மிரட்டும் தொனியில் உரத்துப்பேசி எதிர்கட்சிகளுக்கான நேரத்தை வழங்க விடாது செய்கின்றமை,ஒலி வாங்கியை முடக்குகின்றமை,குறுக்கீடுகள் செய்து பேசவிடாது தடுக்கின்றமை,எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்களை கீழ்த்தரமாக விமர்சிக்கின்றமை.ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களி முன்வைக்கின்றமை என சபைமுதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் சர்வாதிகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் சபை முதல்வரின் சர்வாதிகாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இவ்வாறாக சபைமுதல்வரின் சர்வாதிகாரம் தொடர்ந்து அதன் ஒரு கட்டமாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர மீதும் சபைமுதல்வரின் சர்வாதிகாரம் பாய்ந்தது. பாராளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதி தயாசிறி ஜயசேகர எம்.பி.க்கும் சபைமுதல்வருக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. இதில் தயாசிறி ஜயசேகரவை சபைமுதல்வரான பிமல் ரத்னாயக்கத்தான் மோசமான முறையி விமர்சித்துடன் முரண்பட்டும் கொண்டார்.ஆனால் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்னவினால் மூவரடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டது.
சபைக்குள் 20ஆம் திகதி தயாசிறி ஜயசேகர எம்.பி. நடந்து கொண்ட விதம் தொடர்பில் என்னிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை கருத்திற்கொண்டு அது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையை முன்வைப்பதற்காக பிரதி குழுக்களின் தலைவர் ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக்க ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர்கொண்ட குழு என்னால் அமைக்கப்பட்டுள்ளது.அதன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமென என்று சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த விசாரணைக்குழுவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட எதிர்க்கட்சிகள் , அரசாங்கம் இவ்வாறு விசாரணை குழுக்களை அமைக்குமாக இருந்தால் இதனை முன்மாதிரியாக கொண்டு அரசாங்கத்தினால் செய்யப்படுவது போன்று எதிர்க்கட்சியும் அரச தரப்பினர்களின் செயற்பாடுகள் , இடையூறுகள், அனுமதி மறுப்புக்கள் .கீழ்த்தரமான விமர்சனங்கள், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள் என எல்லாவற்றுக்கும் சபாநாயகரிடம் முறைப்பாடுகளை செய்ய நேரிடும். அப்போது அரசு தரப்பினரின் முறைப்பாடுகளை ஏற்று சபாநாயகர் விசேட விசாரணைக்குழுக்கள் அமைப்பது போன்று எம்முடைய முறைப்பாடுகளை ஏற்றும் அதற்காகவும் விசேட விசாரணைக்குழுக்களை நியமிக்க நேரிடும் எனத் தெரிவித்தன.
அவ்வாறு கூறியதுடன் மட்டும் நிற்காது சபைமுதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் கடந்த கால சபை முதல்வர்களின் நன்நடத்தைக்கு முற்றிலும் விரோதமானது என்று குறிப்பிட்டும் 2025.05.20 ஆம்திகதியன்று சபை முதல்வர் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை செய்ய வேண்டும். 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பமான தினத்தில் இருந்து சபை முதல்வரின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் கடந்த கால பாராளுமன்றத்தின் சபைமுதல்வரின் நன்நடத்தைகளுக்கு முற்றிலும் விரோதமானது.எனவே சபை முதல்வர் சபையில் நடந்துக் கொள்ளும் விதம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் சபாநாயகரிடம் எழுத்துமூலமாக முறைப்பாடு செய்து விசாரணைக்குழுவை அமைக்குமாறு கோரியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க சபை முதல்வரின் சர்வாதிகாரத்திற்கு இணையாக சபையில் எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்க பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்படி பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பில் தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். 27/2இன் கீழ் தான் பொது முக்கியத்துவம் வாய்ந்த,நாட்டில் திடீரென ஏற்படும் பிரச்சினைகள், நெருக்கடிகள், அரசின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களினால் கேள்விகள் எழுப்பப்படும்.அதனை தடுப்பதற்கும் அரசுக்கு எதிரான கேள்விகளை தவிர்ப்பதற்குமே அரசின் தலையாட்டி பொம்மையாகவுள்ள சபாநாயகரினால் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றம்,மக்களாட்சி,ஜனநாயகம்,இன,மத,நல்லிணக்கம்,சுதந்திரம் என்ற கோஷங்களோடும் புதிய திசையில் பயணிப்போம் என்ற உத்தரவாத்துடனும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு தான் தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை உள்ளது என்ற தலைக்கனத்தில் நாட்டிலும் நாட்டில் சட்டங்களை இயற்றும் உயர்பீடமான பாராளுமன்றத்திலும் சர்வாதிகார ஆட்டத்தை தொடங்கியுள்ளது.அதாவது தேசியசக்தி என்ற முகமூடியோடு உள்ள ஜே .வி.பி.தனது ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்க சிறிது சிறிதாக தனது கொடூரமான பழைய முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.