ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் வார்டில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தரை தளத்தில் ஏற்பட்ட இந்த தீயால், 4-வது தளம் வரை கரும்புகை பரவியது. இதில், சிக்கி 3 நோயாளிகள் பலியானார்கள். 34 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் 84, 85 மற்றும் 87 வயதுடைய முதியவர்கள் உயிரிழந்து உள்ளனர். 20 நிமிட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உதவி கேட்டு அலறிய நோயாளிகள் பலரை அவர்கள் மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், 72 வயது நோயாளி ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என காவல்துறை தெரிவித்தனர்.
