தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே ஒரு கூட்டை உருவாக்கி வைத்திருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் பேரவை என்ற பெயரில் அக்கூட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருந்தது. இப்பொழுது அக்கூட்டை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். கடந்த திங்கட்கிழமை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்பட்டிருக்கிறது. கொள்கை ரீதியாகத் தெளிவான நிலைப்பாடுகளோடு அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை காணப்படுகிறது. இதன் மூலம் தமிழ்த் தேசியப் பேரவையானது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஆகப்பெரிய கூட்டாக பரிணமித்திருக்கின்றது. எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கு இது அவர்களுக்கு ஒரு பலமான கட்டமைப்பாக இருக்க முடியும்.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையே ஒரு சந்திப்பு இடம் பெற்றது. யாழ்ப்பாணம் ஃபொக்ஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பானது குறிப்பிட்டுச் செல்லக்கூடிய உடன்பாடு எதையும் எட்டவில்லை. இந்தச் சந்திப்பிற்கு கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்துக்கு முன்பு, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் “டாண் டிவி”யில் ஒரு நிகழ்ச்சி ஒளிப்பதிவாகியது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக அதன் செயலாளர் கஜேந்திரனும், தமிழரசுக் கட்சியின் சார்பாக, சுமந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சயந்தனும் பங்குபற்றினர். பொது ஆளாக நான் பங்குபற்றினேன்.
சந்திப்பின் தொடக்கத்தில் உரையாடல் நிதானமானதாகவும் ஒருவர் மற்றவரை குற்றம் சாட்டாததாகவும் அமைந்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் கஜேந்திரன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமந்திரனைக் குற்றம் சாட்டத் தொடங்கினார். அதனால் கோபமடைந்த சயந்தன் இடையில் குறுக்கிட்டு தானும் பதிலுக்குக் குற்றம் சாட்டத் தொடங்கினார்.இரண்டு அரசியல்வாதிகளும் என்னை நடுவில் வைத்துக்கொண்டு மோசமாக மோதிக்கொண்டார்கள். ஒருவர் மற்றவர் மீது அவதூறுகளையும் சதிக் கோட்பாடுகளையும் அள்ளி வீசினார்கள். ஒருவர் மற்றவரை எதிரியின் ஆள் என்று நிரூபிப்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருந்தது. இரண்டு பேர்களுக்கும் நடுவே அமர்ந்திருந்து, நான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். முடிவில் நான் கஜேந்திரனிடம் ஒரு கேள்வி கேட்டேன். “இன்னும் ஒரு மணித்தியாளத்தில் இரண்டு கட்சிகளும் சந்திக்கப் போகின்றீர்கள்.அப்பொழுது எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கப் போகின்றீர்கள்? இப்படி மோதிவிட்டு அங்கே போய் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கலாம்?” என்று. அதற்கு அவர் சொன்னார், நாங்கள் கொள்கையின் அடிப்படையில் தான் முடிவை எடுப்போம் என்று.
ஒளிப்பதிவு முடிந்ததும் மூன்று பேருக்கும் தேநீர் வந்தது. இரண்டு அரசியல்வாதிகளும் சிரித்துப் பழகி தேநீரை அருந்தினார்கள். அப்பொழுது நான் கேட்டேன், “மோசமாக ஒருவர் மற்றவரை நிந்தித்தும் குற்றச்சாட்டியும் மோதிக் கொண்டீர்கள்.இங்கே வந்து சினேகபூர்வமாக தேநீர் அருந்துகிறீர்களே?” என்று. இதுதொடர்பாக என்னோடு உரையாடிய யாழ். பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர் ஒருவர் சொன்னார், “அவர்கள் கமராவுக்கு முன் அமைதியாக உரையாடிவிட்டு, தேநீர் அருந்தும் பொழுது மோதி இருந்திருந்தால். அது அழகாக இருந்திருக்கும்” என்று.
அதுதான் உண்மை. மக்களுக்கு முன் அவர்கள் காட்டும் சித்திரம் என்ன என்று பார்த்தால் ஆளை ஆள் குற்றம் சாட்டுகின்ற, ஆளை ஆள் துரோகியாக்குகின்ற ஒரு சித்திரம்தான். ஆனால் தேநீர் அருந்தும் பொழுது அப்படி ஒரு மோதலே நடவாதது போல அவர்கள் வெகு சகஜமாகப் பழகுகிறார்கள். அதை ஒரு ஜனநாயகப் பண்பு என்று அவர்கள் கூறக்கூடும்.ஆனால் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துத்தான் ஆயுதப் போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டு விட்டார்கள்.
இவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் பின்னணியில், அந்த நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்தில் நடந்த ஃபொக்ஸ் ஹோட்டல் சந்திப்பானது, திருப்தியான முடிவுகள் இன்றி முடிவுக்கு வந்தது. அந்த சந்திப்பு வெற்றி பெறாத ஒரு பின்னணிக்குள்தான், கடந்த திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே ஒரு உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.
அப்படி ஒரு உடன்படிக்கையை தமிழரசுக் கட்சியோடும் கையெழுத்திடலாம் என்று ஏற்கனவே நான் எழுதியுள்ளேன். டான் டிவியில் ஒளிப்பதிவு நடந்தபின் தேநீர் அருந்துகையில் அது தொடர்பாக நான் இருவரிடமும் சொன்னேன்.” ஏக்கிய ராஜ்ய தொடர்பான வெளிப்படையான பகிரங்கக் கருத்தரங்கு ஒன்றை நடத்துங்கள். அதன் மூலம் ஒரு முடிவுக்கு வாருங்கள். ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு தீர்வையும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதனையும் வெளிப்படையான சமஸ்ரியைத்தான், அதாவது உச்ச நீதிமன்றத்தால் அது ஒற்றை ஆட்சி என்று பொருள்கோட முடியாத ஒரு சமஸ்ரியைத்தான் ஏற்றுக் கொள்வது என்பதனையும் ஓர் உடன்படிக்கையாக்கி அதில் கையெழுத்திடுங்கள்.பிரச்சினை தீர்ந்தது…” என்று. இருவரும் பதில் சொல்லவில்லை
ஏறக்குறைய அதையொத்த ஒரு உடன்படிக்கைதான் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எழுதப்பட்டிருக்கிறது. அந்த உடன்படிக்கையின் பின் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால், தமிழரசுக் கட்சியின் ஆட்கள் குறிப்பாக சுமந்திரன் அணி, அந்த உடன்படிக்கையைக் கடுமையாகக் கேலி செய்து பகிடியாக்கி எழுதுவதைக் காண முடிகிறது. அவர்கள் அவ்வாறு எழுதத் தேவையான ஒரு இறந்த காலம் இருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளை, அதாவது முன்னாள் இயக்கங்களை மிகவும் கீழ்த்தரமாக குற்றம் சாட்டிய ஒரு கட்சி. இந்தியாவின் ஆட்கள் இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று மேற்படி இயக்கங்களை முத்திரை குத்திய ஒரு கட்சி. 13ஆவது திருத்தத்தை விட்டுக்கொடாதவர்கள், ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வை ஏற்றுக் கொள்பவர்கள், இந்தியா உத்தரவிடும் முடிவுகளுக்குக் கீழ்படிகின்றவர்கள்… என்றெல்லாம் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது அதே கூட்டமைப்போடு ஓர் உடன்படிக்கை எழுதப்பட்டிருக்கிறது. எனவே முன்னைய குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய ஒரு நிலை. அந்த குற்றச்சாட்டுகளை வைத்து சுமந்திரன் ஆதரவாளர்கள் அந்தக் கூட்டைக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள்.
ஆனால் அதுதான் கட்சி மைய அரசியல். அப்படித்தான் கூட்டுக்கள் உருவாக முடியும். கட்சி மைய அரசியலில் சமயோசிதக் கூட்டுக்கள்தான் உருவாக முடியும்.தந்திரோபாயக் கூட்டுக்கள்தான் ஏற்பட முடியும்.புனிதக் கூட்டுக்களுக்கு அங்கே இடம் குறைவு. இந்தக் கட்சிமைய அரசியல் யதார்த்தத்தை முன்னணி ஏற்றுக் கொண்டிருப்பதும் அந்த அடிப்படையில் முடிவுகளை எடுப்பதும் வரவேற்கத்தக்கது. தூய்மைவாதம் சில சமயங்களில் பொது எதிரிக்கு சேவகம் செய்வதாக அமைந்து விடும்.
அது மட்டுமல்ல,ஆழமான கோட்பாட்டு விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் அந்த கூட்டு பொருத்தமானதும்தான். ஏனென்றால், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இரண்டு விதமாக அதனை நியாயப்படுத்தலாம். முதலாவதாக தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவது. அந்த அடிப்படையில் பார்த்தால், அந்தக் கூட்டு மக்களை ஆகக்கூடிய பட்சம் திரட்ட முயற்சிக்கின்றது. எனவே அது பொருத்தமானது. இரண்டாவதாக, பொது எதிரிக்கு எதிராக தேசியவாத சக்திகளை ஒன்று திரட்டுவதும் ஒரு கொள்கைதான். தேசிய மக்கள் சக்தியானது கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பெற்ற ஆசனங்களின் அடிப்படையில் தமிழரசுக் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் நிற்கின்றது. எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நோக்கி அவர்கள் திட்டமிட்டு, கடுமையாக வேலை செய்வார்களாக இருந்தால், ஓர் ஆளுங்கட்சி என்ற அடிப்படையில் வளங்களை ஒன்று குவிப்பார்களாக இருந்தால், அவர்கள் வெற்றிக்கு அருகே வர முடியும். எனவே ஒரு தென்னிங்கை மையக் கட்சி வடக்கு கிழக்கு மாகாண சபைகளைக் கைப்பற்றுவதைத் தடுப்பது என்றால் அந்தப் பொது எதிரிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது. அந்த அடிப்படையிலும் இந்தக் கூட்டு பொருத்தமானது.
மேலும் இக்கூட்டின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு பிரதேச சபைகளை அவர்கள் நிர்வகிக்க முடியும். இரண்டாவதாக சுமந்திரனைத் தனிமைப்படுத்த முடியும். மூன்றாவதாக, குறிப்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் பேர பலத்தை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். தமிழரசுக் கட்சியோடு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைவதைத் தடுப்பதும் இக்கூட்டின் ஒரு நோக்கம். அதனால் தான் இந்தக் கூட்டானது தனக்கு ஆபத்தானது என்று தமிழரசுக் கட்சிக்குள் உள்ள சுமந்திரன் அணி கருதுகின்றது.
சுமந்திரன் அணியைப் பொறுத்தவரை இது ஆபத்தான வளர்ச்சி. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களை நோக்கி புதிய ஒருங்கிணைப்பு முயற்சிகளை எடுத்தபொழுது அதற்குள் கிளிநொச்சியை சேர்ந்த சந்திரகுமாரும் இணைக்கப்பட்டார். அதன்மூலம் அவர்கள் சிறிதரனுக்கு எதிராக தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக நம்பப்பட்டது. மேலும் சந்திரகுமாரோடு உழைப்பவர்கள் சுமந்திரனுக்கும் நெருக்கமாக இருப்பதை கிளிநொச்சியில் காண முடியும். எனவே சந்திரக்குமாரை உள்ளே கொண்டு வந்ததன் மூலம் சுமந்திரனை நெருங்கிச் செல்லும் உள்நோக்கம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கலாம் என்றும் ஊகிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அந்தக் கூட்டு கஜேந்திரக்குமாரோடு இணைந்ததன் மூலம் அந்த வாய்ப்புக்கள் குறைந்து விட்டனவா?
சிறீதரன் அணி இப்புதியய கூட்டை எப்படி பார்க்கும்? ஏனென்றால் சிறீதரன் ஏற்கனவே கஜேந்திரக்குமாரோடு உரையாடியிருக்கிறார்.நான் முன்பு குறிப்பிட்ட டான் டிவி நிகழ்ச்சியின் போது கஜேந்திரன் சிறீதரன் மீது பரிவோடும் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களைத் தெரிவித்தார். தமிழரசுக் கட்சிக்குள் இருந்து சிறீதரன் அணியைப் பிரித்துக் கையாளும் தந்திரம் அங்கே இருந்தது. சிறீதரன் அணிக்கும் சுமந்திரன் அணிக்கும் இடையிலான பிளவுகளைப் புதிய கூட்டு வெற்றிகரமாகக் கையாள முடியும் என்று நம்புவதாகவும் அதை விளங்கிக் கொள்ளலாம்.
ஆனால் கிளிநொச்சியில் சிறீதரனுக்கும் சந்திரகுமாருக்கும் இடையிலான பிளவு ஆழமானது, அதிகம் உள்ளூர்ப் பண்புகளைக் கொண்டது. அந்த உள்ளூர்ப் பண்புகளைத் தாண்டி, சிறீதரன் தமிழ்த் தேசியப் பேரவையின் நேசக் கரத்தைப் பற்றிக் கொள்வாரா ?
பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை; நண்பர்களும் இல்லை; நிரந்தரமான நலன்கள்தான் உண்டு. எனவே அவ்வாறான நலன்களின் அடிப்படையில் எதிர் காலத்தில் தமிழ்த் தேசியப் பேரவையானது பலமடையுமாக இருந்தால் தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியானது தனிமைப்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகரிக்குமா? ஏனெனில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் கூட்டுக்கள் யாவும் தேசிய மக்கள் சக்திக்கு மட்டும் எதிரானவை அல்ல. சுமந்திரனுக்கும் எதிரானவைதான்.