தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ‘டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிகர் ரவிமோகன் நடிக்க உள்ளார். இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படமானது டபுள் ஹீரோ சப்ஜெக்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
