மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அங்குள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். வீட்டில் இருந்த தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் கலைஞர் உருவம் வடிவமைக்கப்பட்டு, அதன் கீழ் செம்மொழி நாள் என எழுதப்பட்டு, பேனா வைக்கப்பட்டு இருந்தது. கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
