வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி என கனிமொழி கூறினார்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து சர்வதேச நாடுகளுக்குத் தெளிவாக விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகின்றன. அதில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் ஒரு எம்.பி.க்கள் குழு இடம்பெற்றுள்ளது. இந்த குழு ஸ்பெயினுக்கு சென்று அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. அதன்பின்னர், அந்நாட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பங்கேற்றார். அப்போது, இந்தியாவின் தேசிய மொழி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி’ என கூறினார். அவரது பேச்சை செய்தியாளர்கள் கைதட்டி வரவேற்றனர். இந்நிலையில், தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி பேசிய வீடியோவை பகிர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் – உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்! இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன்!’ என தெரிவித்துள்ளார்.