நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்-அக்னீஸ்வரசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதன் பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளதாக கூறினார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் ஆட்சிப்பொறுப்பேற்று 1,491 நாட்களில் 3,000 திருக்கோவில்களில் குடமுழுக்குப் பெருவிழாக்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை பக்தர்கள் போற்றுகிறார்கள், அற்பர்கள் கதறுகிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
