பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி சந்தித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்ததாக நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் வெற்றி பெறுவதுடன், தனது பக்கம் தனிப்பெரும்பான்மையை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களைக் குறிவைத்து, அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, இதுவரை காலியாக இருந்த மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களாக எஸ்.டி.கே. சேகர் (திருவள்ளூர் வடக்கு), பகவான் பழனி (திருவள்ளூர் கிழக்கு), ரஜினி (திருவள்ளூர் தெற்கு), பழனிசாமி (தென் சென்னை தெற்கு), மயிலை ஆறுமுகம் (தென் சென்னை கிழக்கு), வி.எஸ். வெங்கடேஷ் (வேலூர் கிழக்கு), முருகன் (மதுரை புறநகர் தெற்கு), பாண்டி காமாட்சி என்ற பாரதி பாண்டியன் (மதுரை புறநகர்), சந்தானதாஸ் (ராமநாதபுரம் கிழக்கு), சிங்கராயன் (தென்காசி தெற்கு), திருமலைசாமி (தென்காசி வடக்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16-ம் தேதி முதல், டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார். அதன்படி, இன்றும் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையே கட்சியில் அதிகாரப் போட்டி நிலவி வந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே இன்று சமாதானம் ஏற்பட்டு, மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று கட்சியினர் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, தைலாபுரத்தில் ராமதாஸை சைதை துரைசாமி மற்றும் ஆடிட்டர் குருசாமி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.