விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருந்தார். இதனை விஷாலுக்கு பதிலாக லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் செலுத்தியது. நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு இந்த தொகையை வழங்கவில்லை. தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தமானது. இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பி தர உத்தரவிடக்கோரி விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டனர்.
