அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு முழு ஆதரவாக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு , மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் அதிருப்தி அடைந்தார். இதனால் அவர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் டிரம்ப் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு டிரம்பும் பதிலடி கொடுத்தார். இந்த மோதலுக்கு இடையே, எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மஸ்க் கடுமையாக எதிர்த்த ‘பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்’-லை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருந்தார். புத்தியை இழந்துவிட்ட மஸ்க் உடன் இனி எப்போதும் பேசப் போவதில்லை என டிரம்ப் திட்டவட்டமாகக் கூறினார். இதற்கிடையே, ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரில் கட்சி துவங்க இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த டிரம்ப், எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். டிரம்ப் கூறியிருப்பதாவது: எலான் மஸ்க் மிகவும் அவமரியாதைக்குரியவர். அவர் வெள்ளை மாளிகையை அவமரியாதை செய்தார். அவரால் (எலான் மஸ்க்) நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன். அதிபர் பதவியை அவமரியாதை செய்ய முடியாது. வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு எலான் மஸ்க் நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை. அவருடனான உறவு முறிந்தது முறிந்ததுதான். நான் மற்ற வேலைகளைச் செய்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அவரிடம் பேசும் எண்ணம் எனக்கு இல்லை” என்றார்.
