அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எலான் மஸ்க், தனது எக்ஸ் வலைதளத்தில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில் அமெரிக்காவில் 80 சதவீத நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா? என்று கேள்வி கேட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கணிப்புக்கு 80 சதவீத மக்கள் அதாவது, 56.30 லட்சம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்தனர். அமெரிக்க மக்களின் இந்த பதில், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது. இதையடுத்து எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். மேலும் தான் தொடங்க இருக்கும் புதிய கட்சிக்கு ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெயரையும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது: அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன். அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருப்பது விதி. கட்சியின் பெயரை ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்று சொல்வது நல்ல தொனியாக உள்ளது. உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.