கேரளாவில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இந்த பழமையான கோவிலில் புதுப்பிக்கும் பணியானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, நேற்று காலை 7.40 மணி முதல் 8.40 மணிக்குள் புரோகிதர்கள் சடங்குகளை செய்தனர். திருவாங்கூர் அரச குடும்பத்தின் தலைவராக உள்ள மூலம் திருநாள் ராம வர்மா, கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் இந்த சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அவருடன், அவருடைய அரச குடும்ப உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். முதலில் அஷ்டபந்த கலசம் பூஜை திருவம்பதி கோவிலில் நடந்தது. இதன்பின்னர் காலை 8 மணியளவில் விஷ்வக்சேனா சிலையை மீண்டும் நிறுவும் பணி நடைபெற்றது. இந்த சிலை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன்பின்பு தந்திரிகள், புரோகிதர்கள் ஆகியோருடன் அரச குடும்ப தலைவர் ஆகியோர் ஊர்வலம் சென்றனர். அப்போது, பக்தர்கள் நாராயண மந்திரம் உச்சரித்தனர். இந்த சடங்கை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில், 4 நுழைவு வாயில்களிலும் வீடியோ காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் செய்வதற்காக, காலை முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இந்த அரிய சடங்கு நிகழ்ச்சியில் கேரள ஆளுனர் விஷ்வநாத் ராஜேந்திர அர்லேகரும் கலந்து கொண்டார்.
