பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தக் லைஃப் திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது. இதனிடையே தக் லைஃப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் அந்த பாடலை தீ பாடிய நிலையில், அவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாததால் சினமயி அந்த பாடலை மேடையில் பாடினார். சின்மயி பாடிய முத்தமழை பாடலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ‘தக் லைஃப்’ ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்பாடலுக்கு சினிமா பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் முத்த மழை பாடலை கேட்டு தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் – உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் – நம் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.