இஸ்ரேல்-காசா போர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த போரில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து நிர்க்கதியாக தவிக்கும் சூழல் உள்ளது. எனவே இஸ்ரேல் வழியாக காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தநிலையில் சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து காசாவுக்கு நிவாரண உதவி வழங்க முடிவு செய்தார். இதற்காக இத்தாலியின் சிசிலி தீவில் இருந்து ஒரு சரக்கு கப்பல் நிவாரண பொருட்களுடன் புறப்பட்டது. இஸ்ரேல் கடற்பகுதியில் நுழைந்தபோது கடற்படை அதிகாரிகள் அந்த கப்பலை இடைமறித்து நிறுத்தினர். பின்னர் கப்பலில் இருந்த கிரெட்டா தன்பர்க், பிரான்ஸ் எம்.பி. ரிமா ஹசன் உள்பட 12 பேரை கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டு அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.