குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், விமான விபத்து காட்சிகள் வேதனையளிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “”பல இங்கிலாந்து மக்களை ஏற்றிக்கொண்டு லண்டனுக்குச் புறப்பட்ட விமானம் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வெளியாகி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. நிலைமை குறித்து தொடர்ந்து அறிந்து வருகிறேன். இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன” என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
