– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
பைபிள், பழைய ஆகமத்தில் ஒரு வசனம் உண்டு “பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை” என்று. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கி வைத்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையும் ஏறக்குறைய அப்படித்தான்.
இப்பொழுது தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் சந்திரகுமாரின் கட்சியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்தவைதான். அதாவது கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒன்றாக இருந்தவை. அப்பொழுது தயாரித்த யாப்பு முன்மொழிவைத்தான் இப்பொழுது இறுதித் தீர்வுக்கான முன்மொழிவாக அவர்கள் வைக்கிறார்கள். தமிழ் மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், விக்னேஸ்வரனின் கட்சி ஆகிய இரண்டும் இப்போதுள்ள கூட்டுக்குள் இல்லை. புதிதாக சந்திரகுமார் வந்திருக்கிறார்.
அப்படித்தான் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்ப் பொது வேட்பாளரை முன் நிறுத்திய தரப்புகளில் பெரும்பாலானவை இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து புதிய கூட்டுக்குள் காணப்படுகின்றன. பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிந்த மக்கள் அமைப்பு இல்லை என்பது ஒரு வித்தியாசம். சந்திரக்குமார் சஜித்தை ஆதரித்தவர். அதுவும் ஒரு வித்தியாசம். அப்படிப் பார்த்தால் தமிழ்ப் பொது வேட்பாளருக்காக ஒன்று திரண்ட கட்சிகள்தான் மீண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து ஒரு புதிய கூட்டை உருவாக்கியிருக்கின்றன.
அதாவது கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பொது வேட்பாளருக்காக ஒன்று திரண்டு அதே தரப்புகள் இப்பொழுது சமத்துவக் கட்சி சைக்கிள் கூட்டு என்பவற்றோடு இணைந்து ஒரு புதிய கூட்டாக மேலெழுந்திருக்கின்றன.
பத்து மாதங்களுக்கு முன்பு கஜேந்திரக்குமார் பொது வேட்பாளரை எதிர்த்தவர்.அந்த விடயத்தில் அவரும் சுமந்திரனும் ஒரே கோட்டில் நின்றார்கள். இரு வேறு நிலைப்பாடுகளோடு அவர்கள் பொது வேட்பாளரை எதிர்த்தார்கள். ஆனால் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை பின்னர் கஜேந்திரக்குமார் தேசியப் பண்புமிக்கவை என்று சொன்னார். இப்பொழுது அதே கட்சிகளோடு கூட்டு. ஆனால் மூன்று வித்தியாசங்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு இல்லை. விக்னேஸ்வரனின் கட்சி இல்லை. சந்திரகுமாரின் கட்சி உள்ளே வந்திருக்கிறது.
எனவே இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ் மக்கள் பேரவையை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் பொறுமையாகவும் தீர்க்கதரிசனமாகவும் செயற்பட்டு இருந்திருந்தால் இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலின் நிலைமை எங்கேயோ போயிருக்கும். அப்படித்தான் ஆகக் குறைந்தது கடந்த ஆண்டு பொது வேட்பாளரின் விடையத்திலாவது முன்னணி தீர்க்கதரிசனமாக முடிவெடுத்து இருந்திருந்தால் இன்றைக்கு முன்னணிதான் சில சமயம் தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைச் சக்தியாக மேல் எழுந்திருந்திருக்கும். ஆனால் கடந்த சுமார் 10 ஆண்டுகளில் அவர்கள் தீர்க்கதரிசனமற்ற முடிவுகளை எடுத்தார்கள். பகைவர்களைச் சம்பாதித்தார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகிய நூதனமான கட்டமைப்புகளை பலப்படுத்தத் தவறினார்கள்.
தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக கட்டமைப்பு ஆகியவை இந்தப் பிராந்தியத்திலேயே நூதனமான அரசியல் தோற்றப்பாடுகள். கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கலவை. அப்படி ஒரு கலவைதான் இப்பொழுது நாட்டை ஆளும் தேசிய மக்கள் சக்தியும். தமிழ் மக்கள் பேரவை படிப்படியாக பலவீனம் அடைந்து போன ஒரு காலகட்டத்தில் 2018இல் தெற்கில் தேசிய மக்கள் சக்தி உருவாகியது. இன்றைக்கு அது ஆளுங்கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது.
எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த ஒரு தசாப்த காலத்தில் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையில் புதிய கூட்டைப் பாதுகாக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்த கட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தியாக அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே நிராகரிக்கப்பட்டவரும், அதே ஆண்டின் இறுதியில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவருமாகிய சுமந்திரன் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மூத்த கட்சி ஒன்றின் தலைவர் போல செயல்படுகிறார்.கட்சிக்கு கிடைத்த வெற்றிக்கூடாக அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளப் பார்க்கிறார். தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த வெற்றி சுமந்திரனின் வெற்றியோ அல்லது சிவிகேயின் வெற்றியோ அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கு தழுவிய ஒரே கட்சியாக அது காணப்படுகின்றது. அதனால்தான் அது ஏனைய கட்சிகளை விடவும் பலமாக மேலெழ முடிந்தது.
ஆனால் முன்னணி யாழ்ப்பாணத்துக்கு வெளியில் போதிய அளவுக்கு வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஒரு கட்சியாகவும் தங்களை வளர்த்துக் கொள்ளத்தவறி விட்டார்கள்; தங்கள் கொள்கைகளை மக்கள் மயப்படுத்தி தமிழ் மக்களை ஒரு தேசமாகவும் திரட்டத் தவறி விட்டார்கள்அதன் விளைவாக தமிழரசுக் கட்சியின் முதன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க அவர்களால் முடியவில்லை.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணை என்பது மிகத் தெளிவானது. ஒன்றுபட்டால் மட்டும்தான் என்பிபியை எதிர்கொள்ளலாம் என்பதே அந்த ஆணை. ஒன்றுபடவில்லை என்றால் என்பிபி அடுத்த மாகாண சபைக்குள் மேலும் பலமாக கால்களை ஊன்றப் பார்க்கும்.
ஆனால் கடந்த சில வாரங்களாக புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், வாதப் பிரதிவாதங்கள், மோதல்கள், குறிப்பாக அவர்களுடைய விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கும் வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் தெரிவது என்னவென்றால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மேற்படி கட்சிகள் சரியாக கிரகித்துக் கொள்ளவில்லை என்பதுதான். இந்த ஆணை புதியது அல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏறக்குறைய தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அத்தகையதுதான். தேசமாகத் திரளவில்லை என்றால் என்பிபியின் வழிகளை இலகுவாக்குவீர்கள் என்பதே.
எனவே பொது எதிரிக்கு எதிராகத் தேசமாகத் திரள்வது எப்படி என்பதுதான் இங்குள்ள சவால். சுமந்திரன் அதற்கு தயாரில்லை என்பதற்காக, சி வி கே அந்த விடயத்தில் தளம்புகிறார் என்பதற்காக, தமிழரசு கட்சிக்குள் உள்ள எல்லாரையுமே அவ்வாறு தேசத் திரட்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்த முடியாது; மாத்திரை குத்தவுங்கூடாது. ஏனென்றால் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது தெளிவாக இரண்டு அணிகள் உண்டு. அதில் சிறீதரன் அணியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் பரிவோடு காணப்படுகிறது. சந்திரக்குமாரை புதிய கூட்டுக்குள் உள்ளீர்த்ததன் மூலம் சிறீதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவில் சில நெருடல்கள் ஏற்படலாம். ஆனாலும் சுமந்திரனுக்கு எதிரான அணிச் சேர்க்கை என்று பார்க்கும் பொழுது சிறீதரன் அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிட்டவாகத்தான் நிற்கும்.
அதற்காக அரசியலை சுமந்திரனுக்கு எதிராக குவிமையப்படுத்தத் தேவையில்லை.அது தவறு. மாறாக தேசத்தைத் திரட்டுவது என்ற அடிப்படையில் கிராமங்களில் இருந்து தமிழ்த் தேசியப் பேரவையை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்திக்கலாம். ஏறக்குறைய ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்த பொழுது இதே கட்சிகள்தான் எழுக தமிழ்களைச் செய்தன. மக்கள் எழுச்சிகள்தான் அரசியலில் புதிய ரத்தச் சுற்றோட்டங்களை ஏற்படுத்தும். அவ்வாறான மக்கள் எழுச்சிகளுக்குரிய உணர்ச்சிகரமான தொடக்கப் புள்ளிகள் ஏற்கனவே உண்டு. உதாரணமாக தையிட்டி. அடுத்தது, கிழக்கில் மேய்ச்சல் தரை. மன்னாரில் கனியவள மண் அகழ்வு..இவை தவிர அண்மைக் காலமாக கிண்டப்பட்டு வரும் செம்மணிப் புதைகுழி. இது ஓர் உணர்ச்சிகரமான விடயம் இங்கே கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட விதம், பார்ப்பவர்களை கொதிப்படையச் செய்யக்கூடியவை. எனவே இந்தப் புதை குழியைச் சூழ்ந்திருக்கும் அரசியலை புதிய போராட்டக் களமாக மாற்றலாம்.
அப்பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாக கருதத்தக்க வாக்குமூலங்களை சம்பந்தப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர்களே நீதிமன்றங்களில் வாக்குமூலங்களாக வழங்கியிருக்கிறார்கள். எனவே செம்மணிப் புதை குழியானது காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் புதைத்த குழிகளில் ஒன்றாக இருக்குமா இல்லையா என்ற உணர்ச்சிக் கொதிப்பான சந்தேகம் வலுத்து வருகின்றது. அந்த உணர்ச்சிப் புள்ளியில் இருந்து அரசியல் செய்ய வேண்டிய தேவை தமிழ் தேசிய கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் குடிமக்கள் சமூகங்களுக்கும் உண்டு. ஏற்கனவே கடந்த ஐந்தாம் தேதி பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதியில் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். யாழ்.பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒப்பீட்டளவில் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது.
தமிழ்த் தேசியப் பேரவையும் செம்மண்ணிலிருந்து மக்கள் மைய அரசியலை தொடங்கலாம். ஏற்கனவே எழுக தமிழ் செய்த அனுபவம் அவர்களுக்கு உண்டு. மக்களை எழுச்சி பெறச் செய்வதென்றால் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் எதையாவது காட்ட வேண்டும் அல்லது உணர்ச்சிக் கொதிப்பான ஏதாவது ஒன்று நடக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தரப்புகள் ஒன்றாகத் திரளும்பொழுது அது மக்கள் மனதில் புதிய நம்பிக்கைகளை உருவாக்கும். கடந்த பௌர்ணமி நாளன்று தையிட்டியில் வழமையை விட கூடுதலானவர்கள் திரண்டார்கள். அது ஐக்கியத்தின் பலம்.
அதுபோலவே செம்மணி புதைகுழி போன்றவை மக்களை இயல்பாக எழுச்சியுறச் செய்பவை. எனவே புதிய கூட்டு அது ஒரு தேர்தல் மைய கூட்டு அல்ல மக்கள் மைய அரசியலுக்கான ஒரு தொடக்கம் என்பதனை நிரூபிக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் அதன் பின் வருவார்கள்.