இந்தியாவிற்கே முன்மாதிரியாக செயலாற்றும் திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
பள்ளிக்கு வராமல் உள்ள 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் அழைத்து பள்ளியில் சேர்க்கும் முயற்சியாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திட்ட இயக்குநர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மாணவர்களை நேரில் சென்று சந்தித்து பேசினார். மேலும் இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகள் குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். விருதுநகர் ஆட்சியரின் இந்த முயற்சிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: “இந்தியாவிற்கே முன்மாதிரி அரசாக செயலாற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை, வெற்றிகளை மாணவர்களுக்கும் – துறை அலுவலர்களுக்கும் உரித்தாக்கும் தங்களின் மேலான வழிகாட்டுதலில் ‘இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு” எனும் நிலையை நிச்சயம் தொடரச் செய்வோம். தாங்கள் வகுத்தளித்த கல்வித் திட்டங்களின் துணை கொண்டு ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.