இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 4 பேரும் உயிரிழந்தனர். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ”இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்” என டிரம்ப் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவை ஈரான் தாக்கினால் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும். ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை; எந்த வகையிலும், வடிவிலும் ஈரான் தாக்கினால் அமெரிக்க ஆயுதப் படை முழு பலத்துடன் களமிறங்கும். இருப்பினும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” என்றார்.
