இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது. இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. தெஹ்ரானை விட்டு மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி தெஹ்ரானில் உள்ள தூதரகம் மூலம் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறும்படியும், இந்தியர்களுக்கு ஏதேனும் உதவி தேவையென்றால் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
