குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ மாணவர் விடுதியில் 7 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு காலை நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்திருந்தார். அப்போது அவரிடம் அகமதாபாத் விமான விபத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “அகமதாபாத் விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம்.. ஆண்டவன் அருளால் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும் ” என்றார். கூலி படம் தொடர்பான கேள்விக்கு “கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியீடு ஆகிறது. ஏற்கனவே, படக்குழு சொல்லிவிட்டதே” என பேசினார்.
