இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ படம் கடந்த 5-ந் தேதி கர்நாடகம் தவிர உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. அதற்கு முன்பு கடந்த மாதம்(மே) 24-ந்தேதி சென்னையில் நடைபெற்ற அந்த பட விழாவில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, தமிழில் இருந்துதான் உங்கள் மொழி பிறந்தது, அதனால் நாம் வேறுபட்டவர்கள் இல்லை என்று கூறினார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்புகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தின. இதையடுத்து கன்னட சினிமா வர்த்தக சபை, கன்னடம் குறித்த தனது கருத்துக்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது ‘தக் லைப்’ படத்தை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது.
இதற்கு எதிராக அதாவது கர்நாடகத்தில் ‘தக் லைப்’ படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசனை கடுமையாக சாடினார். எந்த அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது?, அதற்கு ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். மன்னிப்பு கேட்கும்படி நீதிபதி அறிவுரை கூறினார். ஆனால் கமல்ஹாசன், தான் தவறு செய்யாத போது எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்நிலையில், கர்நாடகத்தில் ‘தக் லைப்’ படத்தை வெளியிடுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ” தக் லைப் படத்திற்கு தடை விதிக்க முடியாது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். .கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை ஏற்க முடியாது. கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறுவது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வேலை இல்லை. தணிக்கைச் சான்றிதழ் பெற்ற எந்தப் படத்தையும் வெளியிடுவதை தடுக்க முடியாது. ‘தக் லைப்’ திரைப்படம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். கர்நாடகத்தில் ‘தக் லைப்’ படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.