அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த மாநாடு இன்று நிறைவடைகிறது. இதனிடையே, ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்தநிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாதியிலேயே வெளியேறி உள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட பதிவில், ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கைழுத்திட்டு உடனடியாக வெளியேறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இன்றிரவே வெள்ளை மாளிகை திரும்ப உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனடா பயணத்தை பாதியில் முடித்துவிட்டு திரும்புவதற்கு முன்னதாக, ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளப் பதிவில், நான் கையெழுத்துப் போடக் கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்துயிட்டு இருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது வெட்கக் கேடானது. இதனால், மனித வாழ்க்கைதான் வீணாகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனப் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா திரும்ப உள்ள அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள அவசரகால அறையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை தயாராக இருக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, ஈரானை அமெரிக்காவும் தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை வைத்து வருகின்றது. இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.