தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்த ஆண்டிலிருந்தே தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, ‘ உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை கடந்த 13-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை ஒவ்வொருவராக சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து, ஏற்கெனவே எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில், தனித்தனியாக தயாரிக்கப்பட்ட கோப்புகளை வைத்து, அதில் உள்ள விவரங்களின் படி நிர்வாகிகளிடம் விவரங்களை பெற்றார். இந்த நிலையில், ‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய கூட்டத்தில் பரமத்திவேலூர், கவுண்டம்பாளையம், பரமக்குடி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் கட்சியின் ஆக்கப்பணிகள், தேர்தல் செயல் திட்டங்கள் குறித்து நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்து வருகிறார். தொகுதி வாரியாக ஒன்றியச் செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்து வருகிறார். வரும் 20-ம் தேதி வரை 12 சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் கைவிட்டுபோன 75 தொகுதிகளை குறிவைத்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். மேலும் திமுக, கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்த மற்றும் வீக்கான தொகுதிகள் என 100 இடங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
