அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த 16 மற்றும் 17-ந் தேதிகளில் (உள்ளூர் நேரப்படி) நடந்தது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் அதில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், “மத்திய கிழக்கில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ ஜி-7 நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளோம். இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கிறோம். பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், பிராந்திய நிலையற்ற தன்மைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது. எனவே, ஈரான் கையில் அணுகுண்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். ஈரான் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால், காசா உள்பட மத்திய கிழக்கில் பதற்றம் தணியும். சர்வதேச எரிபொருள் சந்தைகளில் ஏற்படும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம். சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஜி-7 நாடுகள் மாநாட்டுக்கு இடையே அவர் பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.