இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 6வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 585 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட தகவல்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 585 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,326 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
