தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என மின்அஞ்சல் ஒன்று வந்துள்ளது. இதுபற்றி உதவி காவல் ஆணையாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது, விமான நிலையம் மற்றும் அதன் வளாக பகுதிகளில் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் உதவியுடன் முழு அளவில் தேடுதல் பணி மேற்கொண்டு வருகிறோம். இதுபற்றி கூடுதல் தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார். எனினும், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு குழுவினரின் நீண்ட தேடுதல் வேட்டையில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் பல்வேறு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு வருகின்றன. கடந்த 15-ந்தேதி பிராங்பர்ட்-ஐதராபாத் பயணம் மேற்கொண்ட லுப்தான்சா விமானம், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டலால் நடுவழியிலேயே திரும்பியது. இதேபோன்று மஸ்கட்டில் இருந்து டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. உடனடியாக, அது நாக்பூரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
