பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ‘டி.என்.ஏ’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, ‘பராசக்தி, தணல், இதயம் முரளி’ ஆகிய படங்களை தன்கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், ஆக்சன் கதைக்களத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் அதர்வா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு ‘வலை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அதர்வா முதல் முறையாக 2 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
