அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு கட்டுப்பாடு விதித்தார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது. கடப்பிதழ் நேர்காணல்கள் நிறுத்தப்பட்டன.
மாணவர் கடப்பிதழ் விண்ணப்பித்தவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்து, அவர்களை பற்றிய பின்னணியை அறிய கால அவகாசம் தேவைப்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. இதனால், அமெரிக்காவில் படிக்க திட்டமிட்டு இருந்த வெளிநாட்டு மாணவர்கள் கவலை அடைந்தனர். எப்போது கடப்பிதழ் நேர்காணல்கள் மீண்டும் தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு கடப்பிதழ் வழங்கும் பணியை அமெரிக்கா மீண்டும் தொடங்கி உள்ளது. இத்தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “கடந்த மே மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர் விசா வழங்கும் பணியை மீண்டும் தொடங்கி உள்ளோம். ஆனால், விண்ணப்பம் செய்பவர்கள், தங்களது சமூக வலைத்தள கணக்குகளை அமெரிக்க அரசின் ஆய்வுக்கு உட்படுத்த திறந்துவிட வேண்டும். அப்படி ஆய்வு செய்ய அனுமதி மறுப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். அவர்கள் தங்களது ஆன்லைன் செயல்பாடுகளை மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள கணக்குகளில், அமெரிக்காவுக்கு விரோதமாகவோ, அதன் அரசாங்கம், கலாசாரம், அமைப்புகள், அடிப்படை கொள்கை ஆகியவற்றுக்கு விரோதமாகவோ ஏதேனும் பதிவுகளோ, செய்திகளோ இருக்கிறதா என்று தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஒவ்வொரு தூதரக அதிகாரியும் தணிக்கை அதிகாரிகளாக செயல்படுவார்கள். மொத்த மாணவர் எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கு குறைவான வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
























