கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. இந்நாட்டின் கிளிமஞ்சாரோ மாகாணம் மோஷி நகரில் இருந்து தங்கொ நகருக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 50க்கும் மேற்பட்டோர் கடந்த சனிக்கிழமை இரவு சொகுசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். நெடுஞ்சாலையில் சபசபா என்ற பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே மற்றொரு பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதிமாக அந்த பேருந்தின் டயர் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த சொகுசு பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் 2 பேருந்துகளும் தீப்பற்றி எரிந்தன. இதில் 2 பேருந்துகளுக்குள் இருந்தவர்களும் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பேருந்தில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். மேலும், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இரு பேருந்துகளில் இருந்து மொத்தம் 30 பேரை காயங்களுடன் மீட்டனர். ஆனால், இந்த தீ விபத்தில் 2 பேருந்துகளிலும் பயணம் செய்த 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன.
























