பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று பிரேசில் சென்றார். பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதனை தொடர்ந்து பிரேசில் அதிபர் லுலா டி சில்வாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சவுதன் கிராஸ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் அதிபரால் அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது எனக்குமட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
























