தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளின் இடையேயும் பதற்றம் தொற்றியது. இந்த சூழலை தேசியவாதிகள் பெரிதுபடுத்தினர். இதனால், பதற்றம் இன்னும் அதிகரித்தது. இந்நிலையில், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை மோதி கொண்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. கம்போடிய ராணுவம் நீண்டதூர ராக்கெட்டுகளை கொண்டு பொதுமக்கள் மீது தாக்கியது என தாய்லாந்து குற்றச்சாட்டாக தெரிவித்தது. இந்த சம்பவத்தில் குடிமக்களில் 9 பேர் பலியானார்கள் என முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் இரு தரப்பிலும் சேர்த்து, பலி எண்ணிக்கை மொத்தம் 32 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று கம்போடியாவின் தாக்குதல்களில், தாய்லாந்தின் 29 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 30 பேர் காயமடைந்து உள்ளனர்.
























