சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 ஆராய்ச்சியாளர்களின் காப்புரிமை பெற்ற கண்டு பிடிப்புகள் அடங்கிய அரங்குகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்து ரையாடினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு நடைபெறுகிறது. திராவிட மாடல் அரசு புதிய தொழில் நுட்பங்களை எப்போதும் வரவேற்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை சிறந்து விளங்குகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தமிழ் நாட்டில் அதிகளவில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. இன்று அது வளர்ச்சி அடைந்துள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் 3-வது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
























