நாட்டின் துணை அதிபராக 2022ம் ஆண்டு முதல் ஜக்தீப் தன்கர் செயல்பட்டு வந்தார். ஆனால், கடந்த 21ம் தேதி துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். உடல்நலம், மருத்துவ காரணங்களுக்காக துணை அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்தீப் தன்கர் அறிவித்தார். இதையடுத்து, துணை அதிபர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், துணை அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி (செப்டம்பர்) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வரும் 7ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
























