உத்தரகாசியில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மேகவெடிப்பினை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது. உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த வெள்ளம் தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் பாய்ந்து வரும் வெள்ளத்தில் சிக்கி குடியிருப்புகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டநிலையில், 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சேறும் கலந்து வந்ததால், மலை அடிவாரத்தில் இருக்கும் தாராலி கிராமம் முழுவதுமாகவே மண்ணில் புதையுண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களுக்கு ஹர்ஷில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “மூத்த அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைவரின் பாதுகாப்பிற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
























