இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் 1 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசா முனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, ஏமனில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய இந்த ஏவுகணை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பால் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமன் மீது இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அதிபர் மாளிகை, மின் உற்பத்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 102 பேர் படுகாயமடைந்தனர்.
























