பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் – பண்ணை மீன் சந்தையில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே மாநகர சபை முதல்வர் நேரில் வந்து பார்த்து அந்தப் பிரச்சினைகளை சீர் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
16-09-2025 அன்று செவ்வாய்க்கிழமை அன்றையதினம் குறித்த பகுதிக்கு களவிஜயம் செய்து பார்வையிட்ட பின்னர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மாநகர சபையினர் மின்சார கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற்றது. இதனால் வியாபாரிகள் தமது மீன்களை விற்பனை செய்ய முடியாது திரும்பிச் சென்றதை என்னால் அவதானிக்க முடிந்தது. ஆனால் மின்சாரம் துண்டித்த நாளின் கட்டணம் மாநகரசபையால் மீன் வியாபாரிகளிடமிருந்து அறவிடப்பட்டது.
மீன் சந்தையில் இருக்கின்ற மலசலகூடம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. மாநகர சபை முதல்வரிடம் நான் கேட்பது யாதெனில், நீங்கள் களவிஜயம் செய்து நேரில் வந்து பாருங்கள் இங்கே எவ்வாறான நிலை காணப்படுகிறது என்று.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற்று அரசாங்கம் இவ்வாறான சந்தைகளை அமைத்து தரும்போது மாநகரசபையினர் ஆகிய நீங்கள் அதனை சிறந்த முறையில் பராமரியுங்கள்.
நல்லூர் திருவிழாவில் கடைகளில் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டியிருப்பீர்கள். அந்த நிதியை பயன்படுத்தி இவ்வாறான விடயங்களை சீர்படுத்துங்கள்.
கழிவகத்தின் முக அமைத்துவத்தை சீராக பேணுங்கள். இரவு ஒன்பது மணிக்கு பின்னர் சந்தைக்கு வந்து அங்கு இருக்கின்ற கழிவு நீரை எடுத்து செல்லுங்கள். பகலில் வந்து இடையூறு ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் பகலில் கழிவு நீரை எடுக்க வரும்போது சந்தைக்கு வருகின்ற மக்கள் துர்நாற்றம் காரணமாக திரும்பிச் செல்கின்றனர் – என்றார்.
























