வர்த்தகம் மற்றும் ரஷியா கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட விஷயங்களில் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், குடியுரிமை பெறாத வெளிநாட்டவர் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சம் ஆக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இது அமெரிக்கா செல்ல இருக்கும் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அமெரிக்கா சென்றார். ஐ.நா.வில் வருகிற 27-ந்தேதி அவர் உரை நிகழ்த்துவார். இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். அந்தவகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் பேசியதாக தெரிகிறது. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீத வரி விதித்து இந்தியா மீதான மொத்த இறக்குமதி வரியை 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்திய பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
























