மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்ட இடங்களில் 25-11-2025 அன்று மாலை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து பெயர் பலகை இடுவதற்கான நடவடிக்கைகள் முன்னடுப்பட்ட நிலையில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து சென்றனர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் ஆலயம் மற்றும் எல்லைப்பகுதியான கண்ணன்புரம் ஆகியவற்றில் இந்த தொல்பொருள் திணைக்கள பெயர்ப்பலகை இடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தன் காரணமாக பெயர்ப்பலகை இடும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.
கடந்த 21ஆம் திகதியும் கண்ணன்புரம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பெயர்ப்பலகை இடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் பிரதேசசபையின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதேபோன்று 25-11-2025 அன்று மாலையும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் சென்று தொல்பொருள் பெயர்ப்பலகையினை இடுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தபோதும் அவர்களை செல்லவிடாது பொதுமக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணன்புரம் பகுதியானது அம்பாறை-மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியாகவும் நூறுவீதம் தமிழர் பகுதியாகவும் காணப்படுவதனால் தொல்லியல் தொடர்பான செயற்பாடுகள் தமது இயல்பு வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் தொல்லியல் என்ற போர்வையில் பலn சயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் தொல்லியல் என்றால் பௌத்த மதத்தின் அடையாளம் என்று மட்டுமே நோக்கப்படுவதன் காரணமாகவும் இதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கமும் இடம்பெற்றதுடன் தமது பகுதிக்குள் தொல்பொருள் பெயர்ப்பலகையினை இடுவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான பொதுமக்களும் தமது எதிர்ப்புகளை குறிக்கும் வகையில் வீதியில் குமிந்திருந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
தொல்பொருள் பதாகை என்பது ஒரு அடையாளத்திற்கு இடப்படுவது எனவும் அதன்மூலம் வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படமாட்டாது என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டபோதிலும் அதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாது அதற்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள்.
தாங்கள் யானைப்பிரச்சினை,குடிநீர்ப்பிரச்சினை,வீதிப்பிரச்சினை என பல்வேறு கஸ்டங்களுடன் வாழும்போது எந்த கரிசனையும் கொள்ளாதவர்கள் இன்று தொல்பொருள் தொடர்பில் கரிசனைகொண்டுவந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது எனவும் இதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பொதுமக்களுடன் கலந்துரையாடியபோதிலும் தொல்லியல் பெயர்ப்பலகை இடுவதற்கு அனுமதிக்கமுடியாது என தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்காரணமாக பொதுமக்கள் எதிர்ப்பதன் காரணமாக இதனை இடைநிறுத்துவதாகவும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்களது பெயர் விபரங்களை வழங்குமாறு கோரி பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்தவர்களின் பெயர் விபரங்களை பதிவுசெய்துகொண்டு அங்கிருந்து சென்ற நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதேபோன்று வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் ஆலயப்பகுதியிலும் பெயர்ப்பலகை இடும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
























