(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(24-12-2025)
மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக தொழிலை இழந்த மீனவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலர் உணவு பொதிகளை மீனவர்களுக்கு வழங்குவதில் உரிய அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது ? என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கேள்வி எழுப்பி உள்ளார்.
-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் 24ம் திகதி புதன்கிழமை அன்று புதன்கிழமை(24) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
கடந்த 13ஆம் தேதி மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி உரிய திணைக்களங்கள் ஊடாக கேட்டறிந்தார்.
இதன்போது மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்பான விடயங்கள் பேசப்பட்ட போது கடந்த வெள்ளம் மற்றும் புயல் காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டதோடு,வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளமை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் எண்ணிக்கை யை ஜனாதிபதி உரிய அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மன்னர் மாவட்டத்தில் சுமார் 12 , 000 மீனவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பாக நவம்பர் 27 இல் இருந்து கடந்த சில வாரங்களாக அவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டமையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
உடனடியாக விசேட விதமாக ஜனாதிபதி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 12000 மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் வகையில் உலர் உணவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த நிவாரணப் பொதிகள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் மீனவர்களில் இதுவரை 6 ஆயிரம் மீனவர்களின் விவரங்களை மீனவ அமைப்புகள் ஊடாக அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது.ஒரு சில சங்கங்கள் உரிய முறையில் பெயர் பட்டியலில் அனுப்பவில்லை எனவும் தெரிய வந்திருக்கிறது
மொத்தமாக சுமார் 7,000 மீனவ குடும்பங்கள் பதிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருக்கின்ற போதிலும் இதுவரை 2000 மீனவர்களுக்கான உலர் உணவு பொதிகள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த உலர் உணவுப் பொருட்களை மீனவருக்கு வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக பல்வேறு கதைகள் கருத்துக்கள் வெளியாகியிருக்கிறது.
தற்போது மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு விநியோகங்கள் இடம்பெற்று வருகின்ற இந்த நேரத்தில் உலர் உணவுகளை பெற்றுக் கொள்பவர்களில் மீனவ குடும்பம் இருந்தால் அந்த மீனவ குடும்பங்களுக்கு மீனவர்களுக்காக வழங்கப்படுகின்ற உலர் உணவு பொதிகள் வழங்கப்பட மாட்டாது என்ற கருத்துக்களும் தற்போது வெளிவந்துள்ளது.
குறித்த உலர் உணவு பொதிகள் விசேட விதமாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கவே ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அனர்த்தம் ஒன்று ஏற்படுகின்ற போது முதலில் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துவது மீனவர்களே.ஆனால் மீனவர்களுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி விசேட விதமாக மீனவர்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவு பொருட்களை வழங்குமாறு உத்தரவிட்டார்.
அந்த நிவாரணத்தை மீனவர்களுக்கு வழங்குவதில் அதிகாரிகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று தெரியவில்லை.குறித்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
























