துணிவு, ஊடகவியல், சமரசமற்ற கொள்கைகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு நேர்மையும் நிதானமும் கொண்டு தன் பணி செய்த ஒரு உத்தமரின் வரலாற்றுப் பதிவு
அன்னார் பற்றிய அறிமுகத்தைச் செய்யும் போது எமது உள்ளம் புளாங்கிதம் அடையும். அவரது வாழ்க்கை பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.
ஜோசப் பரராஜசிங்கம் — “ஜோசப் அண்ணா” என அன்புடன் அழைக்கப்பட்டவர் — வெறும் ஒரு தனிநபர் அல்ல; அவர் தன்னுள் பல தளங்களை ஒன்றிணைத்த ஒரு வரலாற்று நிறுவனம்.
ஊடகவியலாளர், தமிழ் தேசியவாதி, மனித உரிமைப் பாதுகாவலர், நாடாளுமன்ற உறுப்பினர், மேலும் கிழக்குத் தமிழ்ச் சமூகத்தில் உருவான பல தலைமுறை ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கான வழிகாட்டி மற்றும் நெறியாளர் எனப் பன்முக அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டவர்.
25 டிசம்பர் 2005 அன்று நிகழ்ந்த அவரது படுகொலை ஒரு கொடூரமான உடல் முடிவாக இருந்தபோதிலும், அவரின் அறிவுசார், அரசியல், ஊடகப் பாரம்பரியம் தமிழ் தேசத்தின் ஆன்மாவில் ஆழமாகவும் நிரந்தரமாகவும் பதிந்துள்ளது.
அவர் ஆற்றிய அனைத்துப் பணிகளிலும், 1960கள் முதல் 1990 வரை — ஒரு ஊடகவியலாளராகவும், ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்ட காலமே அவரது வாழ்வின் மிக முக்கியமானதும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான கட்டமாகும்.
ஆரம்பகால ஊடகப் பயணம்: மட்டக்களப்பின் குரல்
1960களிலிருந்து: எதிர்ப்பின் வடிவமாக ஊடகவியல்
ஜோசப் பரராஜசிங்கம் தனது ஊடகப் பயணத்தை 1960களில் ஆரம்பித்தார்.
அது இலங்கை ஊடக வெளியில் தமிழ் குரல்கள் — குறிப்பாக கிழக்கு மாகாணத் தமிழ் குரல்கள் — திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்ட காலகட்டமாகும்.
குணசேனா அச்சகத்தினால் வெளியிடப்பட்ட தினபதி மற்றும் சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளின் மட்டக்களப்பு நிருபராக அவர் பணியாற்றினார்.
அக்காலத்தில், அந்த ஊடக நிறுவனங்கள் நிருபர்கள் மீது கடுமையான ஆசிரியக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.
ஆயினும், ஜோசப் பரராஜசிங்கம் அந்த நிறுவன வரம்புகளைத் தாண்டி, ஊடக சுதந்திரத்தை நடைமுறையில் நிலைநாட்டியவர்.
அக்கால அரசியல் சூழலில், இது அதிக ஆபத்தையும், பெரும் துணிச்சலையும் வேண்டிய செயற்பாடாகும்.
1980களின் மட்டக்களப்பு ஊடகச் சூழல்
இராணுவமயமாக்கலின் கீழ் ஊடகவியல்
1980களின் முற்பகுதியில், மட்டக்களப்பு நகரில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே ஊடகவியலாளர்கள் இருந்தனர்:
• பி. ஜோசப்• செ. நாகராசா• வி. எஸ். கதிர்காமத்தம்பி• ஆர். உதயகுமார்• ஆர். நித்தியானந்தன்
• செழியன் பெரின்பநாயகம்• ராமசாமி துரைரத்தினம் ஆகியோர்.
ஒவ்வொருவரும் தனித்துவமாகச் செயற்பட்டாலும், இராணுவக் கண்காணிப்பு, அச்சுறுத்தல், கைது போன்ற சூழல்களில் ஊடகவியல் நடத்த ஒற்றுமையும் கூட்டு நிலைப்பாடும் அவசியம் என்பதை உணர்ந்து, அவர்கள் ஒருமித்த செயற்பாட்டை மேற்கொண்டனர்.
பின்னாளில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தபோது, ஊடகவியலாளர்களுக்கான ஒரு நிறுவன ரீதியான பாதுகாப்பு அமைப்பு தேவை என்பது தெளிவானது. இதனால் ஒரு மைல்க் கல்லாகத் தோன்றியது கிழக்கு இலங்கை ஊடகவியலாளர் சங்கம் – 1982
இந்தத் தேவையின் விளைவாக, 1982ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தின் முதலாவது பிராந்திய ஊடக அமைப்பான கிழக்கு இலங்கை ஊடகவியலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
• தலைவர்: ஜோசப் பரராஜசிங்கம் • செயலாளர்: செல்லையா நாகராசா
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்த இந்தச் சங்கம், கொழும்பு மைய ஊடக ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு வரலாற்றுப் பதிலாக உருவானது.
1982 முதல் 2004 வரை, இந்தச் சங்கம் ஒரு ஊடக அமைப்பாக மட்டுமன்றி, சமூக, அரசியல், மனித உரிமைச் செயற்பாட்டுத் தளமாகவும் செயல்பட்டது.
மனித உரிமைச் செயற்பாடாக ஊடகவியல். யாரும் துணியாதபோது அரசு வன்முறைகளை ஆவணப்படுத்தல் போன்ற விடயங்களில் அக்கறையுடன் செயற்பட்டது அவரது ஊடக அமைப்பு 1983க்குப் பிறகு, ஆறாவது திருத்தச் சட்டத்திற்கு சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்ததால் TULF நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்தனர்.
இதனால், தமிழ் மக்கள் — குறிப்பாக கிழக்கில் — அரசியல் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்பட்டனர்.
இந்த அரசியல் வெற்றிடத்தில்,
மட்டக்களப்பு தமிழ் மக்களின் நடமாடும் பாதுகாவலராக ஜோசப் பரராஜசிங்கம் உருவெடுத்தார்.
ஒரு ஊடகவியலாளராக அவர்:
• தன்னிச்சையான கைதுகள், காணாமல் போதல்கள், சித்திரவதைகளை ஆவணப்படுத்தினார்
• பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைச் சேகரித்து வழக்குக் கோப்புகளாக மாற்றினார்
• உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை Amnesty International போன்ற சர்வதேச அமைப்புகளிடம் எடுத்துச் சென்றார்
• காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இருந்த தொழில்முறைத் தொடர்புகளைப் பயன்படுத்தி,
கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்கப் போராடினார்
இவ்வாறாகப் தனது ஊடகப் பணியோடு மக்கள் பணியையும் இணைத்தே செயற்பட்டார் . பின்வரும் விடயத்தை தனது தாராக மந்திரமாகக் கொண்டு இயங்கினார்.
செய்திக்காக செய்த ஊடகவியல் அல்ல — மக்களின் உயிர்வாழ்விற்கான ஊடகவியல்.
புலனாய்வு ஊடகவியல்: “சூறாவளிப் புரையோட்டம்”
1978 – சூறாவளிக்குப் பிந்தைய ஊழல் அம்பலம்
1978ஆம் ஆண்டு மட்டக்களப்பைச் சீர்குலைத்த சூறாவளிக்குப் பின்னர், புனரமைப்புக்கென ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதிகளில் பெரும் ஊழல்கள் நடந்தன. அவற்றில் ஜோசப் பரராஜசிங்கம் அம்பலப்படுத்தியவை:பின்வருமாறு அமைகின்றன
• போலி கட்டுமானக் கணக்குகள்
• நிவாரண நிதி துஷ்பிரயோகங்கள்
• நன்கொடையாக வந்த பால்மா, உலர் உணவுகள் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை
“சூறாவளிப் புரையோட்டம்” என்ற தொடர் கட்டுரை, சிந்தாமணி பத்திரிகையில் வெளியானபோது, மக்கள் இதுவரை அறியாத உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. இது புலனாய்வு ஊடகவியல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான வரலாற்று மாதிரி ஆகும். பரபரப்புக்கு அப்பாற்பட்ட ஊடக அறம் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களிடத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது
ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் ,
தனிப்பட்ட புகழையோ பரபரப்பையோ அல்ல —
தமிழ் சமூகத்தின் கூட்டு நலனையே தனது ஊடகவியலின் மையமாகக் கொண்டார்.
மட்டக்களப்பு சிறை உடைப்பு போன்ற மிக உணர்வுபூர்வமான நிகழ்வுகளின்போது, பொது பாதுகாப்பு மற்றும் அரசியல் விளைவுகளை கருத்தில் கொண்டு, சில தகவல்களை வெளியிடாமல் காக்கும் ஊடக அறத்தையும் கடைப்பிடித்தார்.
இளைய ஊடகவியலாளர்களுக்கு, அவர் ஒரு முன்னோடி மட்டுமல்ல — அறமும் அரசியலும் கற்றுக் கொடுத்த ஆசான்.
அன்னாரது பொற்காலம்: 1990 வரை
1990இல் நாடாளுமன்ற அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பான காலமே
ஜோசப் பரராஜசிங்கத்தின் பொற்காலம்.
அக்காலத்தில்: • ஊடகவியல் • மனித உரிமைப் பாதுகாப்பு • தமிழ் தேசியம்
ஆகிய மூன்றும், அவரிடம் ஒரே அரசியல் நெஞ்சோட்டமாக ஒன்றிணைந்திருந்தன.இவற்றினை தனது நெஞ்சிலே சுமந்தவராய் அவடர் உலகெங்கும் பயணித்தார்.
அவரது வலிமை: • ஆழ்ந்த தமிழ் மொழிப்புலமை . அஞ்சாத துணிவு • கொள்கைகளில் சமரசமற்ற நிலை என்பது குறிப்பிடத்தக்கது
2004: கொள்கைகளுக்கான இறுதிப் பரிசோதனை
கருணாவின் உத்தரவை நிராகரித்தல்
2004 பொதுத் தேர்தல் காலத்தில், கருணா விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த சூழலில்:• வேட்பாளர்கள் கருணாவுடன் இணையுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் • புலிகளின் தலைமையுடன் தொடர்பைத் துண்டிக்க உத்தரவிடப்பட்டது
பலர் அச்சத்தால் பணிந்தனர். அனால் எமது ஜோசப் பரராஜசிங்கம் என்னும் நியாயம் காத்துநின்றவர் மட்டும் மறுத்தார்.
அப்போது அஅவர் கூறினார்:
“வடகிழக்குத் தமிழ் தாயகக் கோட்பாட்டை என்னால் கைவிட முடியாது.
அதற்காகப் போராடும் தலைமையுடனேயே நான் நிற்பேன்.” இந்த நிலைப்பாடே
அவரது மரணத் தீர்ப்பாக மாறியது.
சர்வதேசச் சதிப் பின்னணியில் படுகொலை அத்துடன் ‘Project Beacon’ – இலக்கு வைக்கப்பட்ட அழிப்பு
அப்போது நிகழ்ந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை, தமிழீழ நடைமுறை அரசையும், அதன் அரசியல் காவலர்களையும் அழிக்கும் ஒரு உலக–பிராந்திய வியூகத்தின் ஒரு பகுதியாக விளங்கியது என்றால் அது மிகையாகாது.
அத்துடன் இந்தச் சதித் திட்டத்தில்: • இலங்கை புலனாய்வுப் பிரிவு • கருணா–பிள்ளையான் துணை இராணுவம்
• சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளின் ஒத்துழைப்பு ஆகிய மோசமான சக்திகள் அனைத்தும் பின்னிப் பிணைந்திருந்தன.
அத்துடன் இன்னொரு கொடிய நோக்குடன் தமிழர்களது எதிரிகள் செயற்படத் தொடங்கினர். இதில் தமிழர் விரோதிகளான தமிழ்ர்களும் இணைந்திருந்தனர். அந்த வகையில் புலிகளின் சிந்தாந்தத் தொடர்ச்சியைப் பேணக்கூடியவர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டனர்.
இந்த கபட நாடகத்திற்கு பலியாகப் போகின்றவர்களுள் ஜோசப் பரராஜசிங்கம் அதில் ஒரு முக்கியமானவராக எதிரிகளால் கணிக்கப்பட்டிருந்தார்..
அவரது படுகொலை:• இணக்க அரசியல் • அடிபணிவுத் தலைமைகள்• தமிழ் நாடாளுமன்ற அரசியலில் சித்தாந்த நீர்த்துப்போதல் என்ற நிலைகளுக்கு வழி திறந்தது.
ஒரு வரியில் சொன்னால்:
அவரது இரத்தம், சரணாகதி அரசியலுக்கான பாதையை விரித்தது என்னும் கொடுரம் அரங்கேறியது எனினும் அவரது நினைவு ஒரு இயக்கமாக மாற வேண்டும் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
அவரது இழப்பை ஒர சடங்காக நினைவு கூர்வதில் பயன் இல்லை.
அவரது அரசியலைத் தொடர்வதே உண்மையான நினைவேந்தல்.
அது: அஞ்சாத ஊடகவியல் • கொள்கை சார்ந்த தமிழ் அரசியல் • வாய்ப்புவாதத்திற்கான நிராகரிப்பு
• கூட்டு சுயகௌரவப் பாதுகாப்பு என்பவற்றில் தான் வெளிப்பட வேண்டும்.
அவர் ஊடகவியலாளராக வாழ்ந்தார். ஒரு தேசியவாதியாக உயிர் நீத்தார். மட்டக்களப்பின் மற்றும் எமது முழுயான தமிழ் தேசத்தின் —
வரலாற்று மனசாட்சியாக என்றும் வாழ்வார். என்பதை நாம் அனைவரும் மனதிற் கொள்ள வேண்டும்.
ஆக்கம்: ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்றாசிரியர்
சர்வதேச அரசியல், பொருளாதாரம், புலனாய்வு மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்
























