வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், எஸ்ஐஆர் பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம்சாட்டியுனார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டில்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார். தேர்தல் ஆணையம் பாஜக-வின் இடைத்தரகராக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளுடன் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது: எங்களுக்கு பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரும் எஸ்ஐஆர்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள். இதுபோன்ற நான் லட்சக்கணக்கான மக்களை இங்கு அழைத்து வர முடியும். எஸ்ஐஆர்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தலுக்கு சற்று முன்னதாக எஸ்ஐஆர் நடத்தப்படுவது ஏன்? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமெ நடத்தப்படுகிறது. 4 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 3 மாநிலங்களில் எஸ்ஐஆர்நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் அசாமில் நடத்தப்படவில்லை. எந்தவித திட்டமும் இல்லாமல் 2 முதல் 3 மாதங்களில் நடத்தி முடிப்பது சாத்தியமாகுமா? இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
























