அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் மீண்டும் பதவியேற்ற நாள் முதலாய் அமெரிக்காவில் மாத்திரமல்ல உலக நாடுகள் பலவற்றோடு முரண்பட்டு நடப்பது தொடர்பாக பெரும்பாலான அமெரிக்கர்கள் அதிருப்தியில் உள்ளனர் என புதிய மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக விலை உயர்வு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளில் அவர் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ABC News, The Washington Post மற்றும் Ipsos ஊடக அமைப்புடன் இஇணைந்து Ipsos KnowledgePanel மூலம் நடத்திய இந்த கருத்துக் கணிப்பு, Supreme Court of the United States ட்ரம்பின் உலகளாவிய சுங்க வரிகளை ரத்து செய்யும் தீர்ப்புக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.
கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி , ட்ரம்புக்கு எதிரான அதிருப்தி விகிதம் சுமார் 60 சதவீதத்தை எட்டியுள்ளது.
பணவீக்கத்தை கையாளும் விதத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி பொருட்களுக்கான சுங்க வரிகள், வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் குடியேற்ற விவகாரங்களில் கூட அதிகளவில் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு உறவுகள் கையாளப்பட்ட விதத்திற்கு 62% பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குடியேற்றக் கொள்கைகளுக்கு 58% பேர் மற்றும் பொருளாதார மேலாண்மைக்கு 57% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு முக்கிய பிரச்சினையிலும் ட்ரம்ப் தெளிவான மக்கள் ஆதரவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரிடமும் முழுமையான நம்பிக்கை இல்லை என கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
நாட்டின் முக்கிய பிரச்சினைகளை யார் தீர்க்க முடியும் என கேட்கப்பட்டபோது 33% பேர் ட்ரம்பை ஆதரித்துள்ளனர். 31% பேர் ஜனநாயகக் கட்சியை நம்புவதாகவும், மற்றொரு 31% பேர் “யாரையும் இல்லை” எனவும் பதிலளித்துள்ளனர்.
இதன் மூலம் இரு தரப்பினரிடமும் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என்பது வெளிப்படுகிறது. Make America Great Again (MAGA) இயக்கத்தை வலுவாக ஆதரிக்கும் குடியரசுக் கட்சியினர் ட்ரம்பின் நடவடிக்கைகளை பெரும்பாலும் ஆதரித்துள்ளனர்.
ஆனால் MAGA-வுடன் இணைக்கப்படாத குடியரசுக் கட்சியினர், குறிப்பாக பணவீக்கம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பாக விமர்சனமாக இருந்துள்ளனர். பொருளாதார நிலைமை குறித்த பார்வையும் எதிர்மறையாகவே உள்ளது.
சுமார் பாதி அமெரிக்க வாக்காளர்கள், ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து நிலைமை மோசமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
எனினும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மாத்திரமே பொருளாதாரம் மேம்பட்டதாக கூறியுள்ளனர். 22% பேர் மட்டுமே தங்களது நிதிநிலை முன்னேற்றம் கண்டதாக உணர்ந்துள்ளனர்.
மேலும், ட்ரம்பின் பதவித் தகுதி குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. பாதிக்கும் அதிகமானோர் அவர் அதிபராக இருக்க வேண்டிய மனத் திறன் இல்லை எனவும், சுமார் பாதி பேர் உடல்நல ரீதியாக அவர் ஜனாதிபதி பதவிக்கு ஏற்றவர் அல்ல எனவும் அதற்கு தகுதி இல்லாதவரம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ட்ரம் மீது தமக்கு உள்ள நம்பகத்தன்மை தொடர்பாகவும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பத்து பேரில் ஏழு பேர் ட்ரம்ப் நேர்மையானவர் அல்ல என்றும் நம்பகத்தன்மை இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தனது அதிகார வரம்புகளை மீறியுள்ளார் எனவும் பலர் கூறியுள்ளனர்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிந்துரைகளை குறைப்பது மற்றும் பிற நாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த அமெரிக்க இராணுவத்தை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கும் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பு அமெரிக்கா முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் நடத்தப்பட்ட முடிவுகளின்படி , நாட்டில் ஆழமான அரசியல் பிளவு மற்றும் பொதுமக்களின் அதிருப்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. எனவும் அறியப்படுகின்றது.
























