அமெரிக்காவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொடூரமாகக் கொன்று தலைமறைவாக இருக்கும் இந்தியர் தலைக்கு அமெரிக்க மத்திய புலனாய்வுப் அமைப்பான எப்பிஐ வெகுமதி அறிவித்துள்ளது. பத்ரேஷ் குமார் சேதன்பாய் படேல் எப்பிஐ இன் ‘டாப் 10 மோஸ்ட் வான்டட்’ பட்டியலில் உள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்த தகவல்களுக்கு கொடுத்தால் ஏற்கனவே 2,50,000 டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வெகுமதி 1 மில்லியன் டாலராக (சுமார் ரூ.9.18 கோடி) உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12, 2015 அன்று, பத்ரேஷ் குமாரும் அவரது மனைவி பாலக் படேலும் (21) மேரிலாந்தின் ஹனோவரில் உள்ள ஒரு டோனட்ஸ் உணவகத்தில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மனைவியுடனான வாக்குவாதத்தில் அவரை கொலை செய்துவிட்டு பத்ரேஷ் குமார் அங்கிருந்து தப்பினார். பாலக் இந்தியா திரும்ப விரும்பினார் எனவும் பத்ரேஷ் குமார் இதற்கு உடன்படவில்லை எனவும் இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்ததாவும் எப்பிஐ விசாரணையில் தெரியவந்தது. கடந்த 11 ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இருந்தபோதிலும், பத்ரேஷ் குமாரைப் பிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
























