மத்தியில் காங்கிரஸ் – இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் உறுதியளித்தார்.
உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ரேபரேலி உடனான எங்கள் உறவு, 100 ஆண்டுகள் பழமையானது. சில நாட்களுக்கு முன்பு நான் என் அம்மாவுடன் அமர்ந்திருந்தபோது, எனக்கு இரண்டு தாய்மார்கள்; ஒன்று சோனியா மற்றொன்று இந்திரா என்று சொன்னேன். என் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை. ஒரு குழந்தையை பாதுகாப்பதும், அக்குழந்தைக்கு வழிகாட்டுவதுமே ஒரு தாய் என அவருக்கு விளக்கினேன். இதனை என் அம்மாவும், பாட்டி இந்திராவும் செய்தார்கள். இது எனது இரு தாய்மார்களின் ‘கர்மபூமி’. இதனால்தான் நான் ரேபரேலி தொகுதியில் போட்டியிட வந்துள்ளேன். நமது நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, பா.ஜ. – ஆர்.எஸ்.எஸ் மக்கள் நமது அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றுவோம் என்று அவர்களின் தலைவர்களே தெளிவாகக் கூறிவிட்டனர். மத்தியில் காங்கிரஸ் – இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.