கிராமிய பாடல்களை பாடி புகழ் பெற்றவர் பாடகர் வேல்முருகன். பின்னர், தமிழ் திரைப்படங்களிலும் பாட ஆரம்பித்து பெயர் பெற்றார். இவர், சென்னை மதுரவாயல், கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் காரில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக நேற்று சென்றுள்ளார். அதே பகுதி வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் சந்திப்பு அருகே சென்றபோது, அந்த சாலை மெட்ரோ ரயில் பணிக்காக இரும்பு தடுப்பு போடப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்துள்ளது. அப்போது பேரிகார்டை விலக்கி விட்டு அந்த வழியாக செல்ல வேல்முருகன் முயன்றுள்ளார். அப்போது அங்கு பணியிலிருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் துணை மேலாளர் வடிவேலு என்பவர், பாடகர் வேல்முருகனிடம் இவ்வழியாக வாகனங்கள் செல்லக் கூடாது என கூறியுள்ளார். இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாய் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவி மேலாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் மெட்ரோல் பணி அதிகாரியை தாக்கிய வழக்கில் பாடகர் வேல் முருகன் கைது செய்யப்பட்டார். பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசியது மற்றும் ஊழியரை தாக்கியது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
![பின்னணி பாடகர் வேல்முருகன் கைது!](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Singer-Velmurugan.jpg)