காலநிலை மாற்றத்தால் திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் பகுதியில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் மிதப்பதால் பக்தர்கள் கவனமாக குளிக்க கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இங்குள்ள கடலில் புனித நீராடி நாழிக் கிணற்றில் குளித்துவிட்டு முருகப்பெருமானை வழிபடுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பின்பு கடல் அலையில் விளையாடி பொழுதை கழிக்கின்றனர்.
இந்த நிலையில் கால நிலை மாற்றத்தால் தற்போது தமிழ் மாதங்களில் பௌர்ணமி, அமாவாசை மற்றும் சஷ்டி திதிகளிலும் கடல் நீர்மட்டத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதனால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள் தற்போது திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் புனித நீராடும் கரையோரம் வரைக்கும் வந்து விடுகிறது.
பார்ப்பதற்கு நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போல இருப்பதால் பக்தர்கள் அதனை பாசி என்றும் பஞ்சு என நினைத்தும் தொட்டு விடுகின்றனர். அதில் ஒரு சில வகை ஜெல்லி மீன்கள் பக்தர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி வருகிறது. அந்த மீன்கள் கடித்த உடன் கை, கால்களில் ஊறல் மற்றும் தடுப்புகள் வந்து சிவப்பு நிறமாகி விடுகிறது. மேலும், தீ பட்டது போல் எரிச்சலையும்
ஏற்படுத்துகிறது. இதனால் பக்தர்கள் குளிக்கும் போதும், கால் நினைக்கும்போதும் ஜெல்லி வகை மீன்களை கண்டால் அவற்றை கைகளால் தொட வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜெல்லி மீன் பட்டு, உடலில் எரிச்சலோ, தடுப்போ ஏற்பட்டால் உடனடியாக உமிழ்நீரை ஜெல்லி மீன் கடித்த இடத்தில் தடவினால் சீராகிவிடும். இல்லாவிட்டில் தேங்காய் எண்ணெய் தடவினாலும் சரியாகிவிடும். ஆனால், விஷ ஜெல்லி வகை மீன்கள் கடித்தால் கட்டாயம் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் என கடலோர பாதுகாப்பு குழுவினர் தெரிவித்தனர்.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வள்ளி குகை அருகே செயல்பட்டு வரும் மருத்துவ மையத்தில் கடந்த சில நாட்களாக ஜெல்லி மீன் கடிப்பதால் பாதிக்கப்படும் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.