கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சகுந்தலா அருகே உள்ள பள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 42). இவருடைய மனைவி அம்பிளி (36). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
ராஜேஷ் கேரள குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். அம்பிளி அங்குள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பலமுறை போலீஸ் நிலையத்தில் வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அம்பிளி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பள்ளிப்புரம் அருகே அவரை வழிமறித்த ராஜேஷ், தகராறு செய்துள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அம்பிளியை சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் நிலை குலைந்து போன அம்பிளி அலறினார் அதற்குள் ராஜேஷ் அங்கிருந்து தப்பி சென்றார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அம்பிளியை மீட்டு சேர்த்தலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனன்றிஅம்பிளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த சேர்த்தலா போலீசார் தப்பி ஓடிய ராஜேசை தேடி வருகின்றனர்.