மக்களவைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், “அனைவரும் உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில்இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியாது.
டெல்லி நிர்மல் பவனில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வாக்களித்தனர்.
பின்னர் தனது தாயுடன் செல்பி எடுத்துக் கொண்ட ராகுல் காந்தி அதனை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து “நானும், அம்மாவும் எங்கள் வாக்கை செலுத்தி மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவில் பங்களித்தோம். நீங்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வந்து உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என இந்தியில் பதிவிட்டிருந்தார்.
டெல்லியில் சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி போன்ற 7 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த முறை டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன.
தலைநகர் டெல்லியில் தொடங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவருடைய மகள் மிராயா, மகன் ரைஹான் ராஜீவ் வத்ரா, கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான கவுதம் காம்பீர், டெல்லி பாஜக தலைவர் பன்சூரி ஸ்வராஜ், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எனப் பலரும் வாக்களித்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், அவருடைய மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் வாக்களித்தனர். பின்னர் பேட்டியளித்த அவர், “மக்கள் பெருமளவில் வாக்களிக்க வருகின்றனர். அவர்கள் சர்வாதிகாரம், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக வாக்களிக்க வருகின்றனர்” என்றார்.