‘உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உயர்கல்வி சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகைக்காக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 4,13,241 மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகையாக ரூ.ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உயர்கல்வி சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் ரூ.150 கோடி செலவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் 120 மாணவர் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு தரப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.