நாம் வாழும் தற்போதைய யுகத்தில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. மனிதர்கள் செய்யக்கூடிய பல பணிகளை கணினி தொழில்நுட்பத்துடன் கூடிய ரோரோக்கள் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதிலும், கடந்த சில ஆண்டுகளாக ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் முன்னேற்றம் மிகவும் அதிநவீன ரோபோக்களின் வருகைக்கு வழிவகுத்துள்ளது. வீடு மற்றும் அலுவலகங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேலைகளை துல்லியமாக செய்வது, ஓட்டல்களில் உணவு பரிமாறுவது உள்ளிட்ட பல பணிகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரோபோக்கள் இதுவரை உதவிப்பணி மற்றும் ஆய்வுக்கான கருவிகளாக மட்டுமே கருதப்பட்டன. இப்போது ராணுவ மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாற்றியமைக்கப்படுகின்றன. அவ்வகையில், மேம்படுத்தப்பட்ட அதிநவீன ரோபா நாயை சீன ராணுவம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோ நாயின் முதுகில் நீண்ட எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. செல்லும் பாதைகளில் உள்ள தடைகளை சரியாக கண்டறிந்து அதற்கேற்ப நகர்ந்து எதிரிகளின் இலக்கை நோக்கி தாக்கும் வகையில் இந்த ரோபோ நாய் உருவாக்கப்பட்டுள்ளது.